Skip to main content

மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம் ... marghazhi

"மாஸானாம் மார்கசீர்ஷ: அஹம்" (அத் 10 ஸ்லோ 35) என்று மாதங்களில் மார்கழியை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சிறப்பித்துக் கூறியுள்ளார். மார்கழி என்றதுமே ஆண்டாளும், திருப்பாவை பாசுரங்களும், கண்ணனும் நினைவுக்கு வரும். (சுடச்சுட பொங்கலுக்கு விடியலில் சீக்கிரமே கோயிலுக்குப் போக வேண்டுமாதலால், நிறையப் பேரால் ஆசையிருந்தும் அது முடிவதில்லை என்பது வேறு விஷயம்.)

திருப்பாவையில் கண்ணன் ஆண்டாளுக்கு அன்பனாக வருகிறான்; கீதையில் அர்ஜுனனுக்கு நண்பனாக, உபதேஸம் செய்யும் கீதாசாரியனாக வ்ருகிறான். ஆண்டாள் காட்டிய பக்திக்கும், அர்ஜுனன் காட்டிய பக்திக்கும் ஒரு மெல்லிய வித்தியாசம் உண்டு.

உங்களுடன் ஸ்கூலில் 1-வது முதல் 10-வது வரை ஒன்றாகப் படித்து பின்னர் வேறு ஊருக்கு மாறிவிட்ட உங்கள் பாலிய வயது ஸ்நேகிதன் முப்பது ஆண்டுகள் கழிந்து திடீரென சமூகத்தில் ஒரு பெரிய மனிதனாக உங்கள் முன் வந்தால், அவனை (அவரை?) எப்படி கூப்பிடுவீர்கள்? அவனுடன் (அவருடன்) எப்படி பழகுவீர்கள்?? ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கப்போன ஸுதாமாவின் மனநிலை போன்று இருக்குமா?

இதே DILEMMA நிலைதான் ஆண்டாளுக்கும் இருந்தது; அர்ஜுனனுக்கும் இருந்தது. இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள்?

கிருஷ்ணன் ஒரு மஹாத்மா, பரமன், ப்ரம்மம் என்பதை ஆண்டாள் அறிவாள். "ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்காக" இருந்தாலும், "பேய்முலை நஞ்சுண்டு" அரக்கியை அழித்த குழந்தையாக இருந்தாலும், அவன் "பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், "ஓங்கி உலகளந்த உத்தமன், "பாழியந் தோளுடை
பத்மநாபன், மாமாயன், மாதவன், வைகுந்தன்", "நாற்றத்துழாய் முடி நாராயணன்", "முகில்வண்ணன்", என்பதனை அவள் நன்கு அறிவாள்.

இருந்தும், "கொழுந்தே, குலவிளக்கே", என்று அவனைக் கூப்பிட்டவள் திடீர் திடீர் என "அறஞ் செய்யும் எம்பெருமான்" என்றும், "உலகளந்த உம்பர் கோமானே" என்றும் மாறுபட்டு கூற ஆரம்பிக்கிறாள். அதீத பக்தியால் விளையும் DILEMMA. பரமனா, ஸ்நேகிதனா என்பதில் ஆண்டாளுக்கு முதல் 26 பாசுரங்களில் மட்டுமே குழப்பம் இருந்தது.

27-ஆம் பாசுரம் வந்தது - குழப்பம் நீங்கியது. நமது பாலிய வயதுத் தோழன் தானே, அவனை "அடா புடா, வாடா போடா" என்று அழைப்பதைத் தான் அவன் விரும்புவான் என்று மனம் தெளிந்து, குழப்பமேயில்லாமல், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா", (கோவிந்தன் = மாடு மேய்ப்பவன்) என அழைக்க ஆரம்பித்து விட்டாள். (பாசுரம் 27க்கு முன்பு எங்குமே கோவிந்தன் என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்காது!)

பாசுரம் 28-லிலும் அவனுடன் ஆண்டாள் மற்றும் தோழியர் சிறு பிராயத்தில் விளையாடிய விளையாட்டுகளை "கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்" (மாடுகளை மேய்த்துக் கொண்டு காடுகளுக்கு சென்று, ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துவோம்), என நினைவூட்டி, "குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றுதான் அழைக்கிறாள். "இற்றைப் பறை கொள்வான், அன்று காண் கோவிந்தா" (பா-29) என பாசுரத்திற்கு பாசுரம் "கோவிந்தா, கோவிந்தா" என்ற அழைப்புதான்.

ஆண்டாளின் மனதில் முன்பு பரமனாகவும் பின்பு கோவிந்தனாகவும் இருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு எப்படி இருந்தான்?

ஆரம்பம் தொட்டே கண்ணனை அர்ஜுனன் கிருஷ்ணா, கோவிந்தா, மாதவா, கேசவா, மதுஸூதனா, ஜநார்தனா என்றுதான் அழைத்து வந்தான். கண்ணனும் அர்ஜுனனை "பக்த அஸி, மே ஸகா ச" (ஸகா = ஸ்நேகிதன்) (அத் 4 ஸ்லோ 3) என்றுதான் நினைக்கிறான். அத் 4 லிலிருந்துதான் கண்ணன் தான் யாரென்று கோடி காட்ட ஆரம்பிக்கிறான் (அப்யுத்தானம் அதர்மஸ்ய ததா ஆத்மானம் ஸ்ருஜாமி அஹம்) (அத் 4:7).

கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுனனுக்கு தெளிவு பிறக்கிறது. இதுவரை கிருஷ்ணா என்றும், கேசவா என்றும் அழைத்துக் கொண்டிருந்த அவன் எட்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்தே "கிம் கர்ம புருஷோத்தமா" (அத் 8:1) என கூப்பிடுகிறான்.

"ஹேதுனானேன ஜகத் பரிவர்ததே, மயாத்யக்ஷேண ப்ரக்ருதி" (அத் 9:10) என்று தன்னால்தான் உலகமே சுழல்கிறது என்றும், "அஹம் க்ரது, அஹம் யக்ஞ:, அஹம் ஸ்வாதா .." (அத் 9:16) என்று எல்லாமே நான்தான், "பிதா அஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:" (அத் 9:17) என்று ஜகத்தின் மாதா, பிதா, பாட்டனார் எல்லாமே நான் தான் என்றும் பலவாறாக விளக்கிய பிறகு அர்ஜுனனுக்கு இன்னும் தெளிவு ஏற்படுகிறது. இருந்தும் குழப்பமும் உள்ளது;

"அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ, மத்த: ஸர்வம் ப்ரவர்ததே" (அத் 10:8) அனைத்திற்கும் பிறப்பிடம் நானே, யாவும் என்னிடத்தில் இருந்தே பிரவகிக்கின்றன - இப்படியாக கிருஷ்ணன் விளக்க விளக்க, அர்ஜுனனின் குழப்பம் நீங்கி, கிருஷ்ணன் "பகவான்" எனத்தெளிவு பெருகிறான். பின்பு விஸ்வரூப தரிசனத்தையும் ("கிரீடினம், கதினம், சக்ரினம், தேஜோ ராசிம், ஸர்வதோ தீப்திமந்தம் பச்யாமி") (அத் 11:17) காண்கிறான். பிரமித்துப் போய் நிற்கிறான்.

பகவானைப் பற்றிய உண்மையை அறிந்த அர்ஜுனனுக்கு, தற்போது பயம் வருகிறது. இதுநாள் வரை "ஸகேதி மத்வா ஸத்வா ப்ரஸபம் யதுக்தம், ஹே கிருஷ்ண, ஹே யாதவ, ஹே ஸகேதி ... .... " (அத் 11:41 & 42) உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி, அன்பால் தோழன் என்று கருதி, "ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, ஏ கூட்டாளி" என்றெல்லாம் பணிவின்றி கூப்பிட்டேனே, "தத் க்ஷாமயே த்வாம் அஹம் அப்ரமேயம்" (அத் 11:42) என்னை மன்னிப்பீராக என இறைஞ்கிறான்.

புத்திரனை ஒரு தந்தை எவ்வாறு மன்னிப்பாரோ, தோழன் தன் தோழனை எவ்விதம் மன்னிப்பானோ ("பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:" அத் 11:43) அது போன்று தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும்.

அர்ஜுனன் முதலில் கோவிந்தா என்றும், பின்னர் புருஷோத்தமா, பகவான் என்றும் அழைக்கிறான். அன்பினால் தவறாக கூப்பிட்டதற்கு மன்னிப்பும் வேண்டுகிறான். முதலில் "நாராயணா, பத்மநாபா" என கூப்பிட்டுக் கொண்டிருந்த ஆண்டாளோ பின்னர் "கோவிந்தா, கோவிந்தா" எனக் கூப்பிட்டு, அதற்காக, "அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே, இறைவா நீ தாராய் பறையேலோ" என்று மன்னிப்பும் கேட்கிறாள்.

----------
ராஜப்பா
11:45 AM 16 Dec 2008

Comments

My first spontaneous thought raced back to 17 Babu Rao street, GRS Thatha and Pongal at Sankara Madam.

Later, I have understood the contradictions of Andal & Arjuna. Andal has treated Lord Krishna as her friend after initial dilemma and on the contrary Arjuna started treating Him as Lord.

After the first mail in the morning, I was watching that there was a huge gap in your mailing. I thought something big is coming...

So here comes the marathon efforts of typing eventhough one uses transliteration.

Your efforts keeps me on toes and encourages me to a new found interest.
Unknown said…
உங்களுடைய மார்கழி மாத வர்ணணையை படித்து என்னுடைய அறிவை வளர்த்து கொண்டேன் !! மார்கழி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது சுட சுட......... சிறு வயதில் நான் 17 பாபு ராவ் தெருவில் உள்ள சங்கர மடத்தில் விடி காலை 5 மணியவில் எழுந்து அந்த குளிரில் தலையிலிருந்து காதுபட துணியால் மூடி கொண்டு கோவிலின் நான்கு புற தெருக்களில் பஜனையை பாடிக்கொண்டு கடைசியில் சங்கர மடத்தில்...... ஒம்ம்ம்ம் என்று முழங்கி கொண்டு வரிசையில் நின்று சுட சுட பொங்கலை சாப்பிடுவதில்தான் என்ன ருசி....

பி.கு: நேற்று இரவு டில்லி காமாட்சி அம்மன் கோவிலில் பெரியவர் ஸ்வாமிகளின் ஆசி பெற்றேன். பிறகு பிரசாதமாக சுட சுட பொங்கல் கொடுத்தது மார்கழி மாதத்தை நினைவுக்கூட்டியது - ரவி
Anonymous said…
When i was very sad, i read this. The lines said that KRISHNA is not only a GOD but also the FRIEND and FATHER. I LOVE KRISHNA.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவது இன்று

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011

ஊன மாஸிகம்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்ய க்கூடாது. சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமயல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் . ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம் செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை