Skip to main content

ப்ரஹ்லாத சரித்திரம் - Prahlatha Charithram VISHAKA HARI

ப்ரஹ்லாத சரித்திரம் - ஸ்ரீமதி விஷாகா ஹரி Vishakha Hari.

ப்ரஹ்லாதனைப் பற்றிய கதை எல்லாருக்கும் தெரிந்ததே. முதன்முதலில் எனக்கு இந்தக் கதையை யார் சொல்லியிருக்கக்கூடும் என யோசித்துப் பார்த்தேன் - ஞாபகம் வரவில்லை, என் அம்மாவாகத்தான் இருக்கும்.

முந்தா நாள் சனிக்கிழமை (08-11-2008) மாலை மயிலாப்பூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, கிரி டிரேடிங் Giri Trading கடைக்குள் நுழைந்தோம். 3-வது மாடியில் ஸ்ரீமதி விஷாகா ஹரியின் புதிய DVD "ப்ரஹ்லாத சரித்திரம்" (Moser Baer, Rs 99.00) இருந்தது. உடனே வாங்கினேன். அதை நேற்று (09-நவம்பர்) ஞாயிற்றுக்கிழமைக் கேட்டோம்.

சுமார் 2 1/2 மணி நேரம், தெய்வீக அனுபவம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் " ப்ரஹ்லாத பக்தி விஜயம் " என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. விஷாகாவின் இனிய குரலில், "வாசுதேவா, வாசுதேவா" என்ற தெவிட்டாத பாட்டுடன் ஆரம்பிக்கிறது.

நான்கு கனகாதிகள் (ஸாதுக்கள்) வைகுண்டம் செல்லும்போது, அங்குள்ள ஜெய, விஜய என்ற த்வார பாலகர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள். கோபம் கொண்ட ஸாதுக்கள் "மூன்று ஜன்மங்களுக்கு அசுரர்களாக பிறக்கக் கடவது !' என அவர்களை சபிக்க, கருணை கொண்ட ஸ்ரீமன் நாராயணன் " மூன்று ஜன்மங்களிலும் நானே அவதரித்து, உங்களுக்கு பரிஹாரம் அளிப்பேன்" என் அருளுகிறார்.

முதல் ஜன்மத்தில் அவர்கள் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற அசுரர்களாக பிறக்கின்றனர். ஹிரண்யகசிபு ப்ரம்மாவைக் குறித்து நீண்ட காலம் உக்ர தவம் பண்ணி, "கருணா ஜயதே" எனப் பாடி, "தான் யாராலும், எதனாலும், எங்கேயும், எந்தப்போதும் மரணம் அடையக்கூடாது" என்ற வரத்தைப் பெறுகிறான். மரணபயம் நீங்கிய ஹிரண்யகசிபு கொடுங்கோல் ஆட்சி பண்ண ஆரம்பிக்கிறான். அவனது ராஜ்ஜியத்தில் யாருமே நாராயண நாமத்தை சொல்லக்கூடாது என தடைவிதிக்கிறான்.

இந்த கொடுங்கோல் அசுரனுக்கும், அவனது மனைவி கயாத்திக்கும் ப்ரஹ்லாதன் அவதரிக்கிறான். கர்ப்பத்தில் இருக்கும்போதே, நாரதர் ரிஷி மூலமாக நாராயணனைப் பற்றி அறிந்து, நாராயணனுக்கு பரம பக்தன் ஆகிறான். எப்பொழுதும் அவன் நாவில் நாராயண ஸ்தோத்திரம்தான்.

முப்பத்துமுக்கோடி தேவர்கள் நாராயணன் நாமத்தை ஒரு நாளைக்கு ஒருமுறை சொன்னால், குழந்தை ப்ரஹ்லாதன் ஒருவனே தினமும் முப்பத்து முக்கோடி தடவை "ஓம் நமோ நாராயணாய " சொல்லுவான். "நாராயணன் சாக்ஷ்தாத் பரமாத்மனே" என புரந்தரதாசர் உருகுகிறார்.

கோபம்கொண்ட ஹிரண்யகசிபு, தன்னுடைய குழந்தை என்றும் பார்க்காமல், சூலம், யானை, பாம்பு, மலை, ஸமுத்ரம், விஷம், நெருப்பு என எந்த விதத்திலாவது, ப்ரஹ்லாதனைக் கொல்ல ஆணையிடுகிறான். எல்லாவற்றிலுருந்தும் குழந்தையை ஸ்ரீமன் நாராயணன் காப்பாற்றுகிறான். "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என மஹாகவி அனுபவித்தது இதைத்தான். ஸமுத்திர அரசன் காப்பாற்றும்போது, ராமனை நினைத்து, "வந்தனம் ரகுநந்தனா, சேது பந்தனா .." என உருகுகிறான்.

எல்லா முயற்சிகளிலும் தோற்றுப்போன ஹிரண்யகசிபு, கடைசியாக ப்ரஹ்லாதனைத் தானே கொல்ல நினைக்கிறான். {{ கதையின் இந்தக் கட்டத்தில், விஷாகா ஹரி " நாராயண, நாராயண " என சில நிமிஷங்களுக்கு ஒரு காலக்ஷேபம் பண்ணுகிறார், அருமை. DVD யாக இல்லாமல், ஆஸ்தீக ஸமாஜத்திலேயோ, செட்டிநாடு வித்யாஸ்ரமத்திலேயோ இதை சொல்லியிருந்தால், அங்குள்ள 5000 - 6000 பேரும் கூடவே நாராயண, நாராயண எனச் சொல்லிக்கொண்டு .... நினைத்துப் பார்க்கவே தெய்வீக பரவசமாகிறது }}

"எங்கேடா உன் நாராயணன் ? " என கோபத்துடன் கேட்க, ப்ரஹ்லாதன் "இந்த ஸ்தம்பத்தில் (தூணில்) கூட இருக்கிறான்" என பதிலளிக்க, தூணை ஹிரண்யகசிபு எட்டி உதைக்க, அதிலிருந்து நாராயணன் நாரசிம்ஹனாக வெளிவந்து, அசுரனை வதைத்தான். துவாரபாலகன் விஜயனும் சாபவிமோசனம் பெற்றான்.

தியாகராஜ ஸ்வாமிகளும், புரந்தரதாசரும், அன்னமாச்சார்யாவும் தெளிந்த நீரூற்று போல கதையில் வந்துகொண்டே இருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமிகளின் ஸ்ருதிகளில் என்ன ஒரு இனிமை, பக்தி ரசம் !

தன்னுடைய பக்தனின் வார்த்தையை, சத்யத்தை நிலைநிறுத்த, பகவான் அவதரித்ததே இந்த ப்ரஹ்லாத சரித்திரம்.

நீங்களும் கேட்டு, ஸ்ரீமன் நாராயணனின் நல்லாசிகளையும், கடாக்ஷத்தையும் பெறுங்கள்.

ஓம் நமோ நாராயணாய ..

ராஜப்பா

1000 AM on 10 Nov 2008

என்னுடைய மற்ற விஷாகா ஹரி பதிவுகள்:

ஸீதா கல்யாணம்

ஸுந்தர காண்டம்

ஸ்ரீவெங்கடாத்ரி மஹாத்மியம்

தியாகராஜ ராமாயணம்

Comments